– நூற்றுக்கணக்கானோர் கைது
மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.
ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த சில வாரங்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
மியான்மர் ராணுவம் இந்த போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம் ராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மரில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
அதேபோல் மியான்மர் மக்களுக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவும் தொடர்ந்து பெருகி வருகிறது. இது மியான்மர் ராணுவத்துக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் ராணுவத்தினர் மேலும் ஆக்ரோஷத்துடன் போராட்டத்தை ஒடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் மியான்மரின் 2- ஆவது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் நேற்று அதிகாலை மருத்துவ மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சாலைகளில் அணிவகுத்து சென்றனர். அவர்கள் ராணுவ ஆட்சியை கண்டித்தும் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
போராட்டக்காரர்கள் அனைவரும் யாங்கூனில் உள்ள ஹெல்டன் சென்டர் என்ற பகுதியில் கூடியபோது ராணுவ வீரர்கள் அங்கு தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை வழிமறித்தனர்.
அதன்பின்னர் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி செல்ல முற்பட்டபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க தடியடி நடத்தி கண்ணீர்புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.
அதேசமயம் போராட்டக்காரர்களை ராணுவ வீரர்கள் கைது செய்து குண்டுகட்டாகத் தூக்கி லாரிகளில் ஏற்றிச் சென்றனர். மிகவும் ஆக்ரோஷமான முறையில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் மியான்மரின் மற்றொரு மிகப்பெரிய நகரமான மாண்டலேவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை ராணுவ வீரர்கள் கைது செய்து லாரிகளில் ஏற்றி சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு ஆளும் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்பட 800-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.