புதிய உலகிற்கான தூர நோக்கு
கணினித் துறையில் ஆய்வு, கல்விக்காக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்கு (என்யுஎஸ்) உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனமான ‘சீ லிமிட்டெட்’ $50 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது வோங் இக்கருத்தை முன்வைத்தார்.
நியாயமான, சமமான சமுதாயம், பசுமைமிக்க, நீடித்து நிலைத்து இருக்கக்கூடிய தேசம், அனைவரையும் உள்ளடக்கிய, ஒற்றுமையான சிங்கப்பூர் உள்ளிட்ட இலக்குகளை எட்ட நாம் விரும்புகிறோம் எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கக் கொள்கைகளால் மட்டும் இவற்றை எட்டிவிட முடியாது என்றார்.
தனியார் துறையும் இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற அவர், சிங்கப்பூரின் சமுதாயமும் பொருளியலும் நீடித்து, நிலைத்து இருக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் தத்தம் பங்கையாற்ற வேண்டும் .
புதியதொரு உலகிற்கு சிங்கப்பூரர்களைத் தயார்ப்படுத்தும் முக்கிய வழிகளில் ஒன்று கல்வி என்று குறிப்பிட்ட வோங், கொவிட்-19 சூழலில் தொழில்நுட்ப மாற்றத்தின் வேகம் தொடர்ந்து தீவிரமடைவதைச் சுட்டினார்.
“இன்றைய, நாளைய தேவைகளைப் பூர்த்திசெய்ய ஏற்கெனவே நடப்பில் உள்ள கட்டமைப்புகளையும் செயல்முறைகளையும் மாற்றியமைக்க நாங்கள் மறுயோசனை செய்து வருகிறோம். மாணவர்களுக்குப் பரந்த அளவிலான திறன்களையும் செயலாற்றலையும் வழங்க நாங்கள் கூடுதலானவற்றை செய்கிறோம்.
“அதே வேளையில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் மாணவர்களின் ஆர்வத்தையும் ஆற்றலையும் மேம்படுத்துவதை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்கிறோம்.
“எனவே, தொழில்துறையில் அதிகரித்து வரும் தேவைகளையும் மாணவர்களின் விருப்பங்களையும் பூர்த்திசெய்ய பட்டக்கல்வி, பட்டமேற்படிப்பு உட்பட உயர்கல்வி நிலையில் மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து நாங்கள் அதிகரிப்போம்,” என்று திரு வோங் விவரித்தார்.
இந்நிலையில், என்யுஎஸுக்கு ‘சீ’ நிறுவனம் வழங்கியுள்ள இந்த நன்கொடை அப்பல்கலைக்கழகத்தின் கணினிப் பள்ளிக்குச் செல்லும்.
அப்பள்ளியில் ஏறக்குறைய 4,200 மாணவர்கள் இளநிலைப் பட்டக்கல்வியையும் 1,020 மாணவர்கள் முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற பயில்கின்றனர்.
இதுவரை நிறுவனம் ஒன்றிடம் இருந்து என்யுஎஸ் பெற்றிருக்கும் ஆகப்பெரிய நன்கொடை இதுவாகும்.
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் போன்ற வேகமாக வளர்ந்து வரும் முக்கிய துறைகளில் ஆய்வு, கல்வியில் பல்கலைக்கழகத்தின் முயற்சிகளுக்கு இந்த நன்கொடை ஆதரவளிக்கும் என்று என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய் கூறினார்.
‘சீ’ நிறுவனரும் அக்குழுமத்தின் தலைமை நிர்வாகியுமான ஃபாரஸ்ட் லி, என்யுஎஸுக்கும் தமது நிறுவனத்திற்கும் இடையிலான நீண்டகாலப் பங்காளித்துவத்தை இந்த நன்கொடை குறிப்பதாகச் சொன்னார்.