–மருத்துவ வல்லுநர் கருத்து!!
கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினாலும் தொற்று குறைய 14 நாட்கள் ஆகும் என மருத்துவ வல்லுநர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 6,711 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இதுவரையிலான பாதிப்பு 9,40,145ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 2339 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,80,910ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,927ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 46,308 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது நோய் பரவல் அதிகரித்துள்ளதால் பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 82,982 மாதிரிகளும், 82,202 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் ஒரே நாளில் 2015 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 611 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 604 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
அதே போல், காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட தொற்று குறைய 14 நாட்கள் வரை ஆகும் என மருத்துவ வல்லுநர் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.