காட்மாண்டு: எவரெஸ்ட் மலை உள்ளவர்களுக்கு இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையில், அங்கு 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக லூகாஸ் ஃபர்டன்பேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மனிதன் எங்கெல்லாம் இருக்கிறானோ, அங்கெல்லாம் கொரோனா பரவல் உள்ளது என்ற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பல நாடுகளிலும் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் நல்ல பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எவரெஸ்ட் மலையேற்றத்திற்குத் தயார் செய்து தரும் ஃபர்டன்பேக் அட்வென்சர்ஸ் நிறுவனம் எவரெஸ்ட் சிகரத்தில் பலருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் லூகாஸ் ஃபர்டன்பேக் கூறுகையில், அங்கு இருக்கும் பாதுகாப்பு பைலெட்டுகள், மருத்துவர்கள் உள்ளிட்ட குறைந்தது 100 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் பரிசோதனை முடிவுகள் எங்களிடம் உள்ளன. இதை என்னால் நிரூபிக்க முடியும்.
நேபாள அரசுக்கு எவரெஸ்ட்டில் மலையேற்றத்தை மேற்கொள்பவர்கள் மூலம் கணிசமான தொகை வருவாயாகக் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனாவால் முற்றிலுமாக மலையேற்றம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.