12 ஆண்டுகளாக மரண அவஸ்தை
மருத்துவர்கள் தெய்வத்திற்கு ஈடானவர்கள் என்பார்கள். அந்த மருத்துவர்களும் சில வேளைகளில் தவறு செய்துவிடும்போது அதன் பாதிப்பு மிகக் கடுமையானதாகவே இருக்கும் என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன.
ஒரு பெண் தாய்மையில் சிரமப்படும்போது அந்த வலி கடுமையாக இருந்தாலும் சில மணி நேரத்தில் அது மறைந்துவிடும் .
ஆனால் மருத்துவர்களின் அஜாக்கிரதையால் ஏற்படும் வலி பலகாலம் நீடிக்கும் என்பதற்கு ஒரு தாயின் வேதனை அமைந்திருந்தது.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வி.கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 38). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குபேந்திரி (33). அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 2008- ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 15- ஆம்தேதி திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இவர்களுக்கு தற்போது, 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. பிரசவத்துக்கு பிறகு குபேந்திரிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 18- ஆம்தேதி இவருக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டதால், குபேந்திரியை, அவரது கணவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குபேந்திரியின், வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும், பாலாஜியிடம் டாக்டர்கள் மழுப்பலாக பதில் அளித்து, ஸ்கேன் அறிக்கையும் அவரிடம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாலாஜி அவரது மனைவியை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு மீண்டும் அவருக்கு ஸ்கேன் எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.