கோலாலம்பூர் (ஜூன் 7) : ஊடக பணியாளருக்கான கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி எதிர்வரும் புதன்கிழமை (ஜூன் 9) ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
“இன்று (ஜூன் 7) கோவிட் -19 தடுப்பூசி செலுத்துவதற்கான முற்பதிவினை சில ஊடகத்துறையினர் பெற்றுக் கொண்டுள்ளனர். அவர்களும் வரும் புதன்கிழமை (ஜூன் 9) தங்களுக்கான தடுப்பூசிகளைப் பெறுவார்கள்” என்று கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டரில் உள்ள தடுப்பூசி மையத்தைப் பார்வையிட்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சராக இருக்கும் கைரி, தடுப்பூசி போடப்படும் ஊடக பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பதாக கூறினார்.
தாங்கள் இன்னும் மொத்த ஊடகத்துறையினரின் எண்ணிக்கையை பெறவில்லை என்றும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட 114 ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த,மொத்தம் 5,687 ஊடக பணியாளர்கள் கோவிட் -19 தடுப்பூசியை பெற்றுக் கொள்வார்கள் என்றும் கூறினார்.
கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (CITF) எடுத்த முடிவின் காரணமாக ,ஊடகங்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட முன்னிலை பணியாளர்களுக்கு முன்னுரிமையளிக்கும் நோக்கிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.