கோலாலம்பூர்: கடந்த ஆண்டு இங்குள்ள மருத்துவமனை வார்டில் ஒரு பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஒரு பயிற்சி மருத்துவர் இன்று செலாயாங் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட போது அதை அவர் மறுத்து வழக்கு கோரினார்.
29 வயதான யே வீ யீ, 2020 செப்டம்பர் 5 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் மருத்துவமனை வார்டில் 25 வயதுடைய பெண் நோயாளியிடம் பாலியல் வன்கொடுமை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377CA கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமலும் 30 வருடங்களுக்கு மிகாமலும் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 இன் கீழ் அதே இடத்தில் அதே நேரத்திலேயே நோயாளியை துன்புறுத்துவதற்கான நோக்கத்துடன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் இங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி அல்ல என்று மறுத்து வழக்கு கோரினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி வழங்கப்படும்.
துணை அரசு வக்கீல்கள் நூருல் ‘ஐன் ஷாஃபி மற்றும் கைருன்னிசாக் ஹஸ்னி ஆகியோர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு 10 ஆயிரம் வெள்ளி ஜாமீன் வழங்கினர். குற்றம் சாட்டப்பட்டவரை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் யுவராஜ் சுகபதி, தனது வாடிக்கையாளர் அரசு ஊழியர் என்பதால் மருத்துவமனையில் பயிற்சியில் இருந்ததால் குறைந்த ஜாமீன் தொகையை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
நீதிபதி நூர் ராஜியா மாட் ஜின் ஒரு நபர் ஜாமீனுடன் RM8,000 வெள்ளி ஜாமீனை அனுமதித்தார். அதே நேரத்தில் RM3,000 ஜாமீன் மற்றும் ஒரு நபர் ஜாமீனை மாஜிஸ்திரேட் நூர் ஹபீசா ராஜூனி நிர்ணயித்தார். கூடுதலாக குற்றம் சாட்டப்பட்டவர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு கையெழுத்திட வேண்டும் என்றும் மேலும் பாதிக்கப்பட்டவரை துன்புறுத்தவோ சாட்சிகளை சந்திக்கவோ முயற்சி செய்ய கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. வழக்கை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் ஜூலை 15 ஆம் தேதியை நிர்ணயித்தது.