கோலாலம்பூர் ( ஜூன் 24) :
கோவிட் -19 தடுப்பூசிகள் விற்பனையில் ஈடுபட்டதாக புத்ரா ஜெயா மற்றும் பிரிக்ஃபீல்ட்ஸ் ஆகிய இடங்களில் 3 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (CITF) ஆராய்ச்சி அதிகாரி அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் விளைவாக இரண்டு பெண்கள் மற்றும் 23 முதல் 50 வயதுக்குட்பட்ட ஒரு ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக நகர காவல்துறை தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார். .
இந்த மூவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் அதிகாரிகளாக பணிபுரிந்ததாகவும், கோவிட் -19 தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு எதேர்ச்சையான அழைப்புகளை ஏற்படுத்தி பேசுவதன் மூலம் தடுப்பூசிகளை விற்பனை செய்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார்.
“சந்தேக நபர்களின் வீடுகளை போலீசார் சோதனை நடத்தியதுடன், விற்பனை தொடர்பான 6 கையடக்க தொலைபேசிகளையும் மற்றும் இவ் விற்பனை தொடர்பான ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையை எளிதாக்குவதற்காக அவர்கள் அனைவரும் இன்று முதல் மூன்று நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாத சிறப்புக் குழு (JKJAV) கோவிட் -19 தடுப்பூசிகளை பகிரங்கமாக விற்க எந்த ஒப்புதலும் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பதை மத்திய சி.ஐ.டி.எஃப் செயலகத் தலைவரும் உறுதிப்படுத்தியதாக அஸ்மி கூறினார்.
– பெர்னாமா