ரஜினி ரசிகர்களின் கருத்துக்கு மதிப்பு !!
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றதை விமர்சித்து சர்ச்சை ஏற்படுத்திய நடிகை கஸ்தூரி மீது ரஜினி ரசிகர்கள் ஆத்திரத்தில் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வசைப்பாடினர்.
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவர் மருத்துவமனைக்கு சென்று வரும் புகைப்படமும் அண்மையில் வெளியானது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகை கஸ்தூரி, கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விலக்குகளும் வழங்கப்படவில்லை. தடையை மீறி ரஜினிகாந்த் எப்படி பயணம் செய்தார். இதுகுறித்து ரஜினி தெளிவுப்படுத்த வேண்டும். ரஜினி உள்ளிட்ட யாரும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று கஸ்தூரி கூறினார்.
இந்த பதிவு ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “உடல்நல பிரச்சினை தனிப்பட்ட விஷயம் அதை உங்களிடம் சொல்ல அவசியம் இல்லை. விளம்பரத்துக்காக இப்படி பதிவிட வேண்டாம் என்றெல்லாம் கூறி கஸ்தூரியை கண்டித்தனர். இதனால் சமூக வலைத்தளங்களில் கஸ்தூரிக்கு எதிராக பலரும் கொந்தளித்தனர்.
எதிர்ப்பை தொடர்ந்து கஸ்தூரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி. நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம் என்று கூறியுள்ளார். இதனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.