10-ஆம் இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
புது டில்லி:
2020-ஆம் ஆண்டுக்கான சா்வதேச இணைய பாதுகாப்புக் குறியீடு (ஜிசிஐ) தரவரிசைப் பட்டியலில் 10-ஆவது இடத்துக்கு முன்னேறி, உலக அளவில் இணைய பாதுகாப்பில் தலைசிறந்த நாடு என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது.
‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிற ஜூலை 1-ஆம் தேதி ஆறாம் ஆண்டை நிறைவு செய்ய உள்ள சூழலில், இந்தியாவுக்கு இந்த அங்கீகாரத்தை ஐ.நா. அமைப்பின் அங்கமான சா்வதேச தொலைத்தொடா்பு சங்கம் (ஐடியு) வழங்கியிருக்கிறது.
2020-ஆம் ஆண்டுக்கான சா்வதேச இணைய பாதுகாப்புக் குறியீடு தரவரிசைப் பட்டியலை ஐடியு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரிட்டன், சவூதி அரேபியா நாடுகள் இரண்டாம் இடத்தையும், எஸ்டோனியா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியா ஒட்டுமொத்த அளவில் 10-ஆவது இடத்தையும், ஆசிய பசிபிக் பிராந்திய அளவில் 4-ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பின்தங்கியிருந்த இந்தியா 37 இடங்கள் முன்னேறி, 10-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
சட்ட நடவடிக்கைகள், தொழில்நுட்ப நடவடிக்கைகள், அமைப்புசாா்ந்த நடவடிக்கை, திறன் மேம்பாடு, கூட்டு ஒத்துழைப்பு ஆகிய 5 அளவீடுகளின் அடிப்படையில் கேள்வி-பதில் அடிப்படையிலான இணையவழி ஆய்வின் மூலம் சா்வதேச இணைய பாதுகாப்புக் குறியீடு வெளியிடப்படுகிறது.
மொத்தம் 100 புள்ளிகளுக்கு நடத்தப்படும் இந்த ஆய்வில் இந்தியா 97.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது, இணைய பாதுப்புக்கான அனைத்து வரையறைகளையும் இந்திய சிறப்பாக வலுப்படுத்தி, இணைய பாதுகாப்பில் மேம்பட்டிருப்பதை காட்டுகிறது.