ஆற்றின் அருகே நண்பர்களுடன் விளையாடிய 11 வயது சிறுவன், ஆற்றில் மூழ்கி மரணம்

ஈப்போ: இன்று தாமான் டேசா பெலாஞ்சோங்கான் அருகேயுள்ள கிண்டா ஆற்றில் விழுந்து 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

முகமட் ஹகிமி நூர் இசுதீன் என்ற அச்சிறுவனின் உடல் இன்று காலை 10.30 மணியளவில் பொதுமக்களால் மீட்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் தனது நண்பர்களுடன் ஆற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போதே, இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக தெரிகின்றது.

காலை 11.26 மணியளவில் தங்களுக்கு குறித்த சம்பவம் தொடர்பாக அழைப்பு வந்ததாக பாசீர் புத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தலைவர் முகமட் ஃபட்ஸெலி சே ஹுசின் கூறினார்.

“தமது மீட்புக்குழு அவ்விடத்தை அடைந்த வேளை, பொதுமக்கள் சிறுவனின் உடலை ஆற்றில் இருந்து மீட்டிருந்தனர் என்றார். ஆரம்ப தகவலின் அடிப்படையில், பாதிக்கப்ப்பட்ட சிறுவன் தனது இரண்டு நண்பர்களுடன் ஆற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான் என்றார்.

“பாதிக்கப்பட்டவரின் நண்பர் உதவிக்காக கூக்குரலிட்டதை கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடி வந்து அந்த சிறுவனை மீட்க உதவினார்கள்” என்று இன்று அவரை தொடர்பு கொண்ட போது கூறினார்.

பாதிக்கப்பட்ட நபருக்கு தீயணைப்பு வீரர்கள் சுவாச உதவி (CPR) செய்ததாக முகமட் ஃபட்ஸெலி கூறினார். ஆனால் அது பயனளிக்கவில்லை என்றார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழு, பாதிக்கப்பட்டவரை பரிசோதித்து, அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.

“சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் இறந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் நடவடிக்கை நண்பகல் 1.01 மணியளவில் முடிந்தது என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here