அலார்ஸ்டார்: கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு தடுப்பூசி மையத்தில் தவறாக வெவ்வேறான வகை கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்ட சிக்கை (Sik) சேர்ந்த ஒரு பெண், அதிலிருந்து எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் எதிர் நோக்கவில்லை என்றும் அவர் நலமாக உள்ளார் என்றும் அறியப்படுகிறது.
அந்த பெண்ணின் மகள், நூர் ஜன்னா ராம் (30) இது பற்றி கூறியபோது, தனது தாயாருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் ஊசிக்கு ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டது, பின்னர் இரண்டாவது டோஸுக்கு சினோவாக் தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும், கம்போங் செலாமாட் B யைச் சேர்ந்த அவரது தாயார் ஆரோக்கியமாக இருப்பதாக கூறினார்.
“அல்ஹம்துலில்லாஹ், என் அம்மா நலமாக இருக்கிறார், இன்றுவரை எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் உருவாக்கவில்லை.
“மேலும் தடுப்பூசி மையம் என் அம்மாவின் உடல்நிலையை சரிபார்க்க தம்மை தொடர்பு கொண்டது” என்று நூர் ஜன்னா தொடர்பு கொண்டபோது கூறினார்.
ஆகஸ்டு 5 ஆம் தேதி, நூர் ஜன்னாவின் தாயார் தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்ற போது, அவருக்கு சினோவாக் தடுப்பூசி தவறாக செலுத்தப்பட்டது. ஆனால் அவர் ஃபைசர்-பயோஎன்டெக்கின் தடுப்பூசியையே பெற வேண்டியிருந்தது.
சிக்கில் உள்ள டேவான் அல்-ஹானா தடுப்பூசி மையத்தில் இருந்த ஒரு தாதி கவனமின்றி அவருக்கு தவறான தடுப்பூசியைத் தேர்ந்தெடுத்தது ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.
குறித்த தாதி முதலில் தடுப்பூசி பெறுநரான அந்த பெண்மணியின் தடுப்பூசி அட்டையை சரிபார்க்கவில்லை என்று தெரியவந்தது.
ஆகஸ்டு 10 ஆம் தேதி, கெடா சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஓத்மான் வாரிஜோ கூறியபோது, சம்பந்தப்பட்ட தாதி அந்தப் பெண்ணிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டதாகக் கூறினார்.
தவறான தடுப்பூசி செலுத்தியதாக தாதி தனது தவறை ஒப்புக் கொண்டதாகவும், தவறு நடந்ததால் அவர் கண்டிக்கப்பட்ட பின்னர் சம்பவத்தின் நாளில் தனது கடமைகளைச் செய்வதில் இருந்து அவர் ஓய்வு பெற்றதாகவும் அவர் கூறினார்.