கோவிட் -19 பரவலை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளன.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அங்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், ஏழை நாடுகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி கிடைப்பதிலேயே சிக்கல் நிலவுகிறது. பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் இல்லை.
ஆரோக்கியமான நபர்களுக்கு இது அவசியம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் இரண்டு டோஸ்களில் வீரியம் குறையும் நேரத்தில் 3ஆவது டோஸ் தேவைப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல்; இதை உலக நாடுகள் தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வருமானம் குறைந்த நாடுகளில் போடப்படும் முதல் டோஸ் தடுப்பூசியை காட்டிலும், வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6 மடங்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதேநாம் கூறுகையில், “கொரோனா தடுப்பூசி உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும். ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்ட பின்னர், குறைந்தது ஒரு வருடத்திற்கு பின்னர், பூஸ்டர் டோஸ்கள் பற்றி வளர்ந்த நாடுகள் முடிவெடுக்கலாம். அதுவரை பூஸ்டர் டோஸ் போடுவதை நிறுத்தி வைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.