மலாக்கா, டிசம்பர் 18 :
பத்து பெரெண்டாம், தாமான் மெர்டேக்காவில் நேற்று காரின் மேல் சாலையோரத்திலிருந்த மரம் திடீரென விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயங்களுடன் தப்பினர்.
நேற்று நண்பகல் 2.25 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் தனது மனைவி மற்றும் 19, 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளுடன் புரோட்டான் சாகா வகைக் காரை ஓட்டிக்கொண்டு, நகரத்திலிருந்து தாமான் டத்தோ டாம்பி சிக் காரீம் என்ற இடத்தில் உள்ள, அவர்களது வீட்டிற்கு திரும்பும் வழியில் சென்று கொண்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட அப்துல் ரஷீத் சலீம் கூறுகையில், வாகனம் ஓட்டும் போது, திடீரென பலத்த இடி சத்தம் கேட்டதாகவும், அந்த இடத்தின் நிலைமை முற்றிலும் இருட்டாகிவிட்டது என்றும் கூறினார்.
“அந்த சூழ்நிலை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததால், இறைவனை பிரார்த்தித்துக்கொண்டோம்”.
“இறைவனின் கிருபையால், பலத்த காயங்கள் ஏதுமின்றி குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இருப்பினும், உள் காயங்கள் இருப்பதாக அஞ்சப்பட்டதால், மேலதிக பரிசோதனைக்காக, மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,” என்றார்.
இதற்கிடையில், ஆயர் கிரோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) செயல்பாட்டு அதிகாரி, ஹிஷாமுடின் உமாட் இது பற்றிக் கூறுகையில், அவரது படைப்பிரிவிற்கு பிற்பகல் 2.27 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, சாலைக்கு இடையூறாக இருந்த மரம், காரின் மேல் மோதியது கண்டுபிடிக்கப்பட்டது.
“பாதிக்கப்பட்ட அனைவரும் வெற்றிகரமாக வாகனத்திலிருந்து அகற்றப்பட்டனர், அவர்களுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன,” என்று அவர் கூறினார்.