கோல கிராய், டிசம்பர் 22 :
நாட்டில் பெய்த கனமழையால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, பலத்த நீரோட்டங்கள் காரணமாக தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால், நான்கு கிராமங்களிலிருந்து நகருக்குச் செல்லும் முக்கிய வழித்தடமான பத்து லாடா பாலம் கடந்த திங்கட்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.
அப்பகுதி குடியிருப்பாளர், முஹம்மது ஹிஷாமுதீன் அப்துல்லா, 55, இது பற்றிக் கூறியபோது, கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்த கனமழையால், இங்குள்ள கிளந்தான் ஆற்றின் நீர் பெருக்கெடுத்து, பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு கரையை அரித்தது.
“ஆற்று நீர் மட்டம் ஐந்து மீட்டர் வரை, பாலத்தை மூழ்கடிக்கும் அளவிற்கு உயர்ந்தது, இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளம் குறைந்தபோது, பாலத்தின் கரையை அரிப்புக்குள்ளாகி, அது இடிந்துள்ளது அசம்பாவிதங்களைத் தடுக்கவே பாலம் மூடப்பட்டது என்றார்.
“அருகில் வசிக்கும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் சிறிது காலத்திற்கு மாற்று சாலைகளைப் பயன்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறியதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கிடையில், கூச்சில் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹில்மி அப்துல்லா கூறுகையில், “சம்பவம் குறித்த தகவல், உடனடி நடவடிக்கைக்காக பொதுப்பணித் துறைக்கும் (ஜேகேஆர்) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாலத்தின் புணரமைப்பு பணிகள் முடியும் வரை நினைவூட்டல் பலகைகளை வைக்கப்படும், என்றும் இரு திசைகளில் இருந்தும் வரும் அனைத்து வாகனங்களுக்கும் பாலம் மூடப்பட்டுள்ளது,” என்றார்.