கூலிம், ஜனவரி 12 :
கூலிம் மற்றும் பினாங்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் எட்டு சந்தேக நபர்களை கெடா மாநில போலீசார் கைது செய்துள்ளனர், அத்தோடு அவர்களிடமிருந்தது 59 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த வியாழன் அன்று கூலிமில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்ததாக, கெடா காவல்துறை தலைமை ஆணையர் வான் ஹாசன் வான் அகமட் தெரிவித்தார்.
மாநில மற்றும் மாவட்ட போதைப்பொருள் தடுப்புத் துறையினர் வியாழக்கிழமை மாலை 5.15 மணியளவில் நடத்திய கூட்டுச் சோதனையில், 47 வயதான பேருந்து ஓட்டுநரின் ஸ்லிங் பையில் இருந்த 0.35 கிராம் கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் அவரது பேருந்தை சோதனை செய்த குழுவினர், இரண்டு மூடை கஞ்சாவை பறிமுதல் செய்தனர். முதல் பையில் 19.5 கிலோ எடையுள்ள 19 பதப்படுத்தப்பட்ட கஞ்சாவும், இரண்டாவது சாக்கில் 22.4 கிலோ எடையுள்ள 22 பதப்படுத்தப்பட்ட கஞ்சாவும் இருந்தன.
போதைப்பொருள் விநியோகிஸ்தர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் போலீஸ்காரர் ஒருவர் வெட்டுக் காயங்களுக்கு உள்ளானார்
“கைது செய்யப்பட்ட அந்த குழுவினரிடமிருந்து பின்னர் 11.9 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட கஞ்சாவைக் கொண்ட மற்றொரு சாக்குப்பையை கைப்பற்றியது,” என்று அவர் இன்று மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பேருந்து ஓட்டுநரின் கைதைத் தொடர்ந்து, ஜனவரி 7 மற்றும் 9 க்கு இடையில் கூலிமில் ஒருவரும், பினாங்கில் மூன்று பேரும் மற்றும் திருமணமான தம்பதிகள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கும்பல் ஒரு வருடமாக செயல்பட்டு வருதாகவும் அண்டை நாட்டிலிருந்து பெறப்பட்ட போதைப்பொருட்களை இந்தக்கும்பல் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி அனுப்பியதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கூறினார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 147,450 வெள்ளி என்றும் சந்தேக நபர்களிடமிருந்து 38,000 வெள்ளி பெறுமதியான மூன்று வாகனங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாக வான் ஹசன் தெரிவித்தார்.
29 மற்றும் 49 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
“கைது செய்யப்பட்டவர்களில் பேருந்து ஓட்டுநர், வாடகைக்கு கார் ஓட்டுநர், காவலாளி மற்றும் தொழிலாளியாக பணிபுரியும் சந்தேக நபர்கள், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
அந்த பிரிவின் கீழ், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக, யாரேனும் குற்றவாளியாக கண்டறியப்பட்டால், கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.