கோலாலம்பூர், ஜனவரி 18 :
இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்திற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) பொதுமக்கள் கடைப்பிடித்ததில் திருப்தி அடைந்துள்ளதாக தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சாதிக் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரபலமான பத்து மலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில் கொண்டாட்டத்தின் போது, அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்தும் திறனுக்காக கோயில் நிர்வாகத்தின் முயற்சிகளையும், அதன் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா மற்றும் அவரது தன்னார்வலர்களின் பணியையும் அவர் பாராட்டினார்.
“கடுமையான SOP இருந்தபோதிலும், தைப்பூச கொண்டாட்டத்துடன் இணைந்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் பக்தர்களின் ஆரோக்கியத்தை கோவில் நிர்வாகத்தால் உறுதி செய்ய முடிகிறது,” என்று அவர் இன்று இங்குள்ள பத்து மலையிலுள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் நிலைமையை ஆய்வு செய்த பின்னர் தனது உரையில் கூறினார்.
இந்து பக்தர்கள் தங்கள் மதச் சடங்குகளை சுமூகமாக நிறைவேற்றுவதை உறுதி செய்ததற்காக, பணியிலுள்ள மலேசிய காவல்துறையினரையும் அவர் பாராட்டினார்.
இதனிடையே, பத்துமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் அப்பகுதியைச் சேர்ந்த இந்திய சமூகத்தினரின் நலனுக்காக மண்டபம் கட்டப்படும் என்றும், இந்தத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்றும் மனிதவளத் துறை அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.