சியோல், ஜனவரி 26 :
அனைத்துலக நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனா தொற்று காரணமாக வடகொரியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. ஆனால் அந்த நாடு பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா நேற்று ஒரே நாளில் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து 2 குரூஸ் ரக ஏவுகணைகளை சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஏவுகணை சோதனை குறித்த கூடுதல் தகவல்களை அறிய தென்கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, வடகொரியா இந்த மாதத்தில் நடத்திய 5-வது ஏவுகணை சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.