கீவ், மார்ச் 2:
போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் இருந்து மக்கள் வெளியாகி வருகின்ற நிலையில், அங்குள்ள ரயில்களில் இந்தியர்கள் உட்பட பிற வெளிநாட்டினர் ஏறிப்பயணிக்க அனுமதி மறுக்கப்படுகிறது என்று இந்திய மாணவர் ஆன்ஷ் பண்டிதா வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில், ” இந்தியர்களையோ, பிற வெளிநாட்டினரையோ ரயிலில் ஏற ரயில்வே காவலர்கள் அனுமதிப்பதில்லை. இங்கு (வோக்ஜல் ரெயில் நிலையம்) எவ்வளவு கூட்டம் இருக்கிறது பாருங்கள். இங்கே சலசலப்புகள், கைகலப்புகள் நடக்கின்றன. இந்தியர்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள். என்ன நடக்குமோ என்று எல்லோரும் பயப்படுகிற நிலையில் நாங்கள் நமது கொடியுடன் இங்கே இருக்கிறோம்” என கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ” எங்களை விரைவாக இந்திய தூதரகம் வெளியேற்றும் என்று நம்புகிறோம். இந்திய தூதரகம் விரைவாக எங்களை வெளியேற்றி நாங்கள் வீடு செல்ல வழிவகுக்க வேண்டும்” என்றும் அந்தக் காணொளியில் கேட்டுக்கொண்டார்.