கோலாலம்பூர், ஜூலை 6 :
இங்குள்ள புக்கிட் ஜாலிலிலுள்ள கம்போங் முஹிப்பா அடுக்குமாடி குடியிருப்பில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலில் 34 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது, இது திட்டமிட்டு தீ வைக்கப்பட்ட செயல் என்று போலீசார் கருதுகின்றனர்.
அதிகாலை 2.20 மணியளவில் தீ விபத்து குறித்து, ஒரு பெண் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் கொடுத்ததாக செராஸ் காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் இட்ஸாம் ஜாபர் கூறினார்.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு, தீ விபத்துக்கான காரணத்தை அறிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தடயவியல் குழுவின் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.
“அங்கு மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில், தீ வைக்கப்பட்டதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது ” என்று மமுகமட் இட்ஸாம் கூறினார்.
பாதிக்கப்பட்ட 34 மோட்டார் சைக்கிள்களும் அருகருகே நிறுத்தப்பட்டதால் தீ வேகமாக பரவியதாக அவர் கூறினார்.
இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், இந்த செயலுக்கு காரணமானவர்களை போலீசார் தேடி வருவதாகவும் கூறினார்.
வழக்கு பற்றிய தகவல் தெரிந்தவர்கள்,விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் ஃபிர்தௌஸ் ஈபரை 014-3649458 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.