கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்படவிழா உலகெங்கிலும் உள்ள திரைப்பட இயக்குநர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், திரைப்படங்களின் சிறப்பை வெளிப்படுத்தவும் ஒரு பொதுவான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் மற்றும் கோவா மாநில அரசு இணைந்து நவம்பர் 20-28 தேதிகளில் இந்த விழாவை நடத்துகிறது. திரைப்பட கலாச்சாரங்களை ஒன்றிணைத்து, பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நெறிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கும் உலக சினிமாவைப் பாராட்டுவதற்கும் விழா அனுமதிக்கிறது.
திரைப்படக் கலையின் சிறப்பை வெளிப்படுத்த உலகத் திரையரங்குகளுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்கும் நோக்கத்துடன், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து சில சிறந்த சினிமாப் படைப்புகளை இந்த விழா கொண்டாடுகிறது. இந்த ஆண்டு 53வது சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவதற்கான வழிகாட்டல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதில், தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி தலைவராக இருப்பார். கோவா மாநில முதல்-மந்திரி (இணைத் தலைவர்), தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலர், கோவா மாநில தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் அலுவல்சார் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மேலும், நடிகை குஷ்பு சுந்தர், மனோஜ் முன்டாஷிர், விபுல் அம்ருத்லால் ஷா, பிரசூன் ஜோஷி, பிரியதர்ஷன், ஹ்ரிஷிதா பட், வாணி திரிபாதி, கரண் ஜோஹர், சுக்விந்தர் சிங், நிகில் மகாஜன், ரவி கொட்டாரக்கரா, ஷூஜித் சர்கார்,பாபி பேடி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.