குவாந்தான்: இலங்கையில் பதட்டமான நிலை இருந்தாலும் மலேசிய தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட 85 மலேசியர்கள், பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா (படம்) தெரிவித்தார்.
இலங்கையில் நிலவும் முன்னேற்றங்களை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நிலைமை மோசமடைந்தால் மலேசியர்களை வெளியேற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கையின் அதிபரும் பிரதமரும் சட்டமன்ற சபாநாயகரிடம் அதிகாரத்தை ஒப்படைத்த பின்னர் சில நாட்களில் நிலைமை சீரடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தற்போதைக்கு, மலேசியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், தேவைப்பட்டால் குறிப்பாக உணவு விநியோகம் தொடர்பாக மலேசிய தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று அவர் கூறினார்.
இலங்கையில் உள்ள தங்கள் உறவினர்களை தொடர்பு கொள்ளத் தவறியவர்கள் உடனடியாக கொழும்பில் உள்ள மலேசிய தூதரக அதிகாரிகளை உதவிக்கு எச்சரிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
அவர்களுக்கு மோசமான எதுவும் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை; அங்கு தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.
அனைத்துலக ஊடக அறிக்கைகளின்படி, இலங்கையானது 51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (RM226bil) வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதை அடுத்து, முன்னோடியில்லாத வகையில் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், அனைத்துலக நாணய நிதியத்தின் உதவியை நாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று மத்திய கொழும்பில் உள்ள அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்த லட்சகணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தை எரித்ததை அடுத்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகுவதாக அறிவித்தனர்.