லண்டன், ஜூலை 22:
ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது.
மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் போன லண்டன் போன்ற நகரங்கள் இத்தகைய வெப்ப அலையை சந்திப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தருகிறது.
2019ம் ஆண்டு லண்டன் மாநகரம் அதன் உட்சபட்ச வெப்பநிலையான 38.7 டிகிரி செல்சியஸை எட்டியது. தற்போது வீசிவரும் வெப்ப அலையானது அந்த புள்ளியை கடந்து 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
இத்தகைய வரலாறு காணாத வெப்பத்தால் இங்கிலாந்து நாட்டில் பல உள்கட்டமைப்புகள் உருகும் படங்கள் வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளன. இங்கிலாந்தில் உள்ள ஒரு புகையிரத சமிக்ஞை விளக்கு கடும் வெப்பத்தால் உருகியது. சமூக வலைதளத்தில் இந்த படம் பதிவிடப்பட்டுள்ளது. புகையிரத நிலையங்களின் மேல்நிலை கம்பிகள், வழித்தடங்கள் மற்றும் சமிக்ஞை அமைப்புகள் சேதமடைந்ததால், இங்கிலாந்து முழுவதும் பல புகையிரதங்கள் ரத்து செய்யப்பட்டன.
முதல் அபாயநிலை அறிவிப்பு அமலில் உள்ள லண்டன் நகரில், பெரும்பாலான புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் உணவும், பார்பிக்யூ போன்ற உணவுகளை வெளியே சமைப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.