ஜோகூர் பாரு, ஜூலை 22 :
கடந்த வெள்ளியன்று இங்குள்ள பிளாட் நிபா, தாமான் டாயாவில் கணவனை கொலை செய்த வழக்கில், அவரை அடித்துக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் ஆண் நண்பரின் காவல் அடுத்த வியாழக்கிழமை வரை மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றப் பதிவாளர் திலிப் நாயரால் இந்த தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பித்ததாக தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சம்பந்தப்பட்ட இருவரும் இன்று முதல் ஜூலை 28 வரை ஒரு வாரம் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தில், 44 வயதுடைய சுயதொழில் செய்யும் நபர் ஒருவர் முகம் மற்றும் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 36 வயதான கொலையுண்டவரின் மனைவி, மெத்தம்பேட்டமைன் மற்றும் ஆம்பெடமைன் போதைப்பொருளின் தாக்கத்தில், தனது கணவரைக் கொன்றதாக நம்பப்படுகிறது.
இரண்டு பிள்ளைகளின் தாயனான அவர், தப்பிக்க முயன்றபோது அருகிலுள்ள பகுதிப் போலீசாரால் கைது செய்யப்பட்டார், மேலும் அவரது 52 வயது ஆண் நண்பரும் அதே நாளில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.