சிரம்பான், ஜூலை 23:
நேற்று இரவு 7 மணி முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, இங்கு பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெகிரி செம்பிலான் மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (APM) இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் (PA) முகமட் சுக்ரி முகமட் நோர் கூறுகையில், கம்போங் இஸ்மாயில், கம்போங் சேடாங், தாமான் ஹைப்பி மற்றும் கம்போங் ஸ்ரீ மாந்தாவ் ஆகிய பகுதிகள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும்.
“ஆற்றின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து, ஆற்றின் அருகே உள்ள வீடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது, ஆனால் நிலைமை மோசமாக இல்லை. மழை இரவு 9 மணிவரை பெய்தது, ஆனால் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மழை குறைந்தது.
“சில பகுதிகளில் நீர் மட்டம் 0.5 மீட்டர் வரை உயர்ந்தது, ஆனால் எந்த நிவாரண மையங்களும் திறக்கப்படவில்லை, ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தண்ணீர் குறையும் வரை அருகிலுள்ள சமூகக் கூடத்தில் மட்டுமே காத்திருந்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
20க்கும் மேற்பட்ட மலேசிய குடிமைத் தற்காப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் போலீசார் அங்குள்ள நிலைமையை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றவும், அவர்களது வீட்டுப் பொருட்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றவும் உதவியுள்ளனர் என்று மேலும் கூறினார்.