ஈப்போ, ஜூலை 25 :
போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில், கடந்த வியாழக்கிழமை ஈப்போ நகரைச் சுற்றி தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், திருமணமான தம்பதியை போலீசார் கைது செய்ததுடன் RM2 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் கூறுகையில், 34 வயதான உள்ளூர் ஆடவர் ஜாலான் ராஜா மூசா மகாதியில் உள்ள உணவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டார், வியட்நாமியரான அவரது மனைவி , 38 வயது, பனோரமா லபாங்கான் பெர்டானாவில் மாலை 4.40 மணியளவில் சாலையில் வைத்து கைது செய்யப்பட்டார் என்றார்.
சந்தேகத்திற்குரிய ஆடவரிடம் போலீசார் சோதனை நடத்தியபோது, மெத்தாம்பேட்டமைன் கொண்ட 10 பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் “ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் மற்றொரு காரை சோதனை செய்ததில் அதே போதை மருந்து அடங்கிய 10 பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அத்தோடு தம்பதியினரிடமிருந்து “பிராண்ட்டட் கைக்கடிகாரம், ஒரு காற்சங்கிலி, ஒரு மோதிரம் மற்றும் ஒரு வளையல் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர், இவை அனைத்தும் RM83,315 மதிப்புடையது என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கண்ணாடி மற்றும் அலுமினியம் கடையில் பணிபுரியும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் மெத்தம்பேட்டமைனுக்கு நேர்மறையான பதிலைப் பெற்றார், அவரது மனைவி போதைமருந்து சோதனையில் எதிர்மறையான பதிலை பெற்றதாகவும் மியோர் கூறினார்.
முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லாத இத்தம்பதியினர், மூன்று மாதங்களாக போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ், கடந்த வெள்ளிக்கிழமை முதல் வியாழன் (ஜூலை 28) வரை ஒரு வார காலம் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சமூகம் மற்றும் அமலாக்க அமைப்புகளுக்கு இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பே இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறிய மியோர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் அடிமையாதல் போன்றவற்றை தடுக்கும் முயற்சிகளை காவல்துறை தொடர்ந்தும் தீவிரப்படுத்தும் என்று கூறினார்.