பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26 :
சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனோஸ், 2017 ஆம் ஆண்டு செபுத்தே சட்டமன்ற உறுப்பினர் தெரசா கோக்கின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுமாறு பேசியதற்கு நஷ்டஈடாக RM300,000 வழங்குமாறு, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
எனினும் இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது ஜமால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் ஆரீஃப் எம்ரான் ஆரிஃபினுடைய தீர்ப்பு, ஜமால் தரப்பு தனது வாதத்தை நிரூபிக்கத் தவறியதன் அடிப்படையில் அமைந்தது.
“இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் அந்தத் தொகை பிரதிவாதியால் வாதிக்கு செலுத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஜமாலுக்கு மேலும் RM50,000 செலவீனங்களுக்காகச் செலுத்த உத்தரவிட்டார், மேலும் அவர் அல்லது அவரது முகவர்கள் யாரேனும் எந்த வடிவத்திலும் இதே குற்றச்சாட்டை மீண்டும் கூறுவதைத் தடைசெய்யும் உத்தரவையும் நீதிபதி ஆரீஃப் பிறப்பித்தார்.