கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 :
செந்தூலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், RM300,000-க்கும் அதிகமான மதிப்புள்ள போலித் துப்பாக்கிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு அதன் விற்பனையாளர் என நம்பப்படும் வெளிநாட்டவர் ஒருவரையும் அவர்கள் கைது செய்தனர்.
இன்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், செந்தூல் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் பெய் எங் லாய் கூறுகையில், “26 வயதான அந்த வெளிநாட்டவரின் காரை சோதனை செய்ததில், 25 போலி துப்பாக்கிகள், இரண்டு போலி கைத்துப்பாக்கிகள் மற்றும் 480 ‘புல்லட்டுகள்’ ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, தாமான் ஃபடாசான், ஜின்ஜாங் மற்றும் தாமான் மெகா கெப்போங் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டது. அவ்வீடுகளிலிருந்து “மொத்தம், RM318,520 மதிப்புள்ள பல்வேறு வகையான 2,078 போலித் துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். அவற்றில் போலி கைத்துப்பாக்கிகள், ஸ்னைப்பர் வகை துப்பாக்கிகள் என்பன இருந்தன.
“சந்தேக நபர் கடந்தாண்டு அக்டோபரில் இருந்து செயலில் இருந்ததாகவும், அவர் போலி துப்பாக்கிகளை ஆன்லைனில் விற்றதாகவும் நாங்கள் நம்புகிறோம். இந்த பொருட்கள் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு ஒரு அலகு RM50 முதல் RM200 வரை விற்கப்பட்டது,” என்றார்.
போலித் துப்பாக்கிகளை விற்பது அல்லது சொந்தமாக வைத்திருப்பது குற்றமாகும் என்றும் அவர் கூறினார்.
“தூரத்தில் இருந்து பார்க்கும்போது அது ஒரு பொம்மை துப்பாக்கி போல் தோன்றினால், பரவாயில்லை. ஆனால் தூரத்தில் இருந்து பார்க்கும்போதும் அது உண்மையான துப்பாக்கி போல் தோன்றினால், அது அனுமதிக்கப்படாது என்றார்.
இவற்றை குற்றவாளிகள் இதுபோன்ற அசலைப்போலவே இருக்கும் பொம்மைத் துப்பாக்கிகளை குற்றங்களுக்கு பயன்படுத்த முடியும் ” என்றும் அவர் கூறினார்.