முகநூலில் அவதூறான வீடியோக்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் ஜமால் யூனோஸ் விடுவிக்கப்பட்டார்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் அவதூறான வீடியோக்களை பதிவேற்றிய இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனோஸை அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்து விடுதலை செய்தது.

அரசுத் தரப்பு வழக்கின் முடிவில், ஜமாலுக்கு எதிரான முதன்மையான வழக்கை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதை அடுத்து, நீதிபதி ஹக்கீம் வான் முகமட் நோரிஷாம் வான் யாக்கோப் இந்த முடிவை எடுத்தார்.

52 வயதான ஜமால், பிறரை அவமதிக்கும் நோக்கத்துடன் தனது முகநூல் பக்கத்தில் இரண்டு வீடியோக்களைப் பதிவேற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அவை ஆகஸ்ட் 20, 2020 அன்று நண்பகல் வேளையில், அம்பாங்கில் உள்ள தாமான் டாகாங் அவென்யூவில் பார்க்கப்பட்டன. இவர் காலை 10 மணி மற்றும் மாலை 3 மணிக்கு வீடியோக்களை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் சட்டம் 1998 இன் பிரிவு 233(1)(a) இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது ஒரு வருடத்திற்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

துணை அரசு வழக்கறிஞர் ஐசா அலி ராமன் வழக்கு தொடர்ந்தார். ஜமால் சார்பில் வழக்கறிஞர் முகமது ஹபிசுதீன் கான் நோர்கான் ஆஜரானார். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வழக்கு விசாரணை முழுவதும் மூன்று சாட்சிகளை அழைத்து கடந்த மாதம் அரசுத் தரப்பு வழக்கை முடித்து வைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here