கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 :
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் சிறப்பு சட்டம் மற்றும் மனித உரிமை ஆலோசகர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்ததாக வெளியான வதந்திகளுக்கு பெங்கராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“ஆகஸ்ட் 31, 2022 இல், நான் இன்னும் சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறேன் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்,” என்று அவர் இன்று காலை தனது முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு சுருக்கமான பதிவில் கூறினார்.
மேலும் அவர் #KeluargaMalaysiaTeguhBersama என்ற ஹேஷ்டேக்கைச் சேர்த்திருந்தார்.
தீபகற்பம் காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற 65வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அனைத்து மலேசியர்களுக்கும் மெர்டேக்கா வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
டுவிட்டரில் பரவிய வதந்திகளைத் தொடர்ந்து, பிரதமரின் ஆலோசகர் பதவியில் இருந்து அஸாலினா ராஜினாமா செய்ததாக பல செய்திகள் வெளியாகியிருந்தன.
முன்னாள் அமைச்சரான அஸாலினா கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.