கோலாலம்பூர், செப்டம்பர் 15 :
மூவாரில் உள்ள தனது கூட்டாளியின் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மசீச பொது சேவைகள் மற்றும் புகார்கள் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ மைக்கேல் சோங் கூறுகையில், காணாமல்போன மூவரும் கடைசியாக செப்டம்பர் 3 ஆம் தேதி வெள்ளி நிறக் காரில் வீட்டை விட்டு வெளியேறியதாக, இன்று வியாழன் (செப்டம்பர் 15) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
சீன பிரஜையான டெங் லான் யிங் (42) என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண் தனது ஐந்து வயது மகள் மற்றும் ஆறு மாத ஆண் குழந்தையுடன் காணாமல் போயுள்ளார்.
“புகார்தாரர், திரு டோங் கிம் சூவின் கூற்றுப்படி, வீட்டில் குழப்பம் ஏற்பட்டது, அதன் காரணமாக அவரது துணைவியான காணாமல்போன பெண் குழந்தையின் பால் போத்தல் மற்றும் மருந்தைக்கூட எடுக்கவில்லை என்றார்.
“சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அவர் புறப்பட்டு சென்றதாக கூறப்படும் வெள்ளி நிறக்கார் அவரது வீட்டின் முன் பல சுற்றுகள் செல்வதைக் காட்டியது.
“காணாமல்போன குழந்தை, அவரது மகன், சிறப்புத் தேவைகள் மற்றும் மருந்து உட்கொள்வதால் புகார்தாரர் கவலைப்படுகிறார். அதனால் கடந்த செப்டம்பர் 11 அன்று மூவார் காவல் நிலையத்தில் அவர் போலீஸ் புகார் அளித்தார்,” என்று அவர் கூறினார்.
அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொது சேவைகள் மற்றும் புகார்கள் திணைக்களத்தை 03-2716 5954 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.