கோத்தா திங்கி, செப்டம்பர் 18 :
ஹூத்தன் பான்டி வனப் பகுதியில் மலையேற்றத்திற்குச் சென்று காணாமல் போன 33 வயது சிங்கப்பூரியர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
கோத்தா திங்கி மாவட்ட காவல்துறை தலைவர், ஹூசின் சமோரா கூறுகையில், குபு ஜெப்புன் (பத்து 15) அருகே உள்ள KM52ல், ஜாலான் கோத்தா திங்கி- மெர்சிங் சாலையோரத்தில் பொதுமக்களால் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டார் என்றார்.
இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 18) நண்பகல் 2.22 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது, அதனைத்தொடர்ந்து ஒரு குழுவை அந்த இடத்திற்கு அனுப்பினோம்.
“பாதிக்கப்பட்டவரின் உடலில் சிறிய உரசல் காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன என்றும் அவருக்கு கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்ததற்காக ஜோகூர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.