மலாக்கா, செப்டம்பர் 22 :
மலாக்கா மாநிலத்தில் இரப்பர் தொழில் சிறு தோட்டக்காரர்கள் மேம்பாட்டு ஆணையத்தின் (Risda) கீழ் உள்ள 1,392 சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்த ஆண்டு மலாக்காவில் இரப்பர் மீள் நடுகைத் திட்டத்தை செயல்படுத்த மொத்தம் RM2.39 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் குழுத் தலைவர் டத்தோ அப்துல் ரசாக் அப்துல் ரஹ்மான் கூறுகையில், இந்த திட்டம் அலோர் காஜா மற்றும் ஜாசினில் உள்ள 1,739.6 ஹெக்டேர் இரப்பர் செய்கைப் பகுதியை உள்ளடக்கியது என்றார்.
“இரப்பர் மீள் நடுகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவி பணமாக வழங்கப்படாது, மாறாக ரிஸ்டா சிறிய விவசாயிகளுக்கு பழைய இரப்பர் மரங்களை அகற்றவும் புதியவற்றை மீள் நடுகை செய்யவும் உதவும் என்றார்.
இன்று வியாழன் (செப்டம்பர் 22) இங்கு நடைபெற்ற மலாக்கா மாநில அளவிலான நல்ல விவசாய நடைமுறைகள் (MyGAP) மாநாட்டைத் திறந்து வைத்து பேசிய அவர், “இந்தத் திட்டம் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் என்றும் ஒவ்வொரு ஹெக்டேர் மீள் நடுகைத் பகுதிக்கும் சுமார் RM13,000 ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
நாட்டின் இரப்பர் தொழில் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்கு, உயர்தர இரப்பரை உற்பத்தி செய்வதற்கு இரப்பர் மீள் நடுகைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றார்.