கைதிலிருந்து தப்பிக்க 1,020 கிலோ சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை விட்டுவிடு ஓடிய கடத்தல்காரர்

தும்பாட், அக்டோபர் 24 :

இங்குள்ள ஜாலான் உலு வகாஃப் பாரு ரயில் நிலையத்தில் நேற்று சட்ட அமலாக்க அதிகாரிகளால் துரத்தப்பட்ட பின்னர், 1,020 கிலோ எடையுள்ள சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளுடன் புரோத்தோன் வீரா ஏரோபேக் காரை விட்டுவிட்டு, ஒரு கடத்தல்காரர் தப்பித்து ஓடினார்.

மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக சந்தேக நபர் இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

மாநில உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் இயக்குனர், அஸ்மான் இஸ்மாயில் கூறுகையில், உளவுத்துறை தகவலின் பேரில், தும்பாட் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) ரோந்துப் பணியில் இருந்த உறுப்பினர்கள் குழு சந்தேகத்திற்கிடமான காரை பின்தொடர்ந்தனர்.

அண்டை நாடுகளுக்கு கடத்துவதற்காக, குறித்த கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

“தான் பின்தொடர்வதை உணர்ந்து, சந்தேக நபர் ஜாலான் உலு வகாஃப் பாரு ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று,காரை நிறுத்திவிட்டு புதருக்குள் தப்பிச் சென்றார்.

“அவரின் காரை ஆய்வு செய்ததில், மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் கொண்ட 60 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் வழங்கல் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961 இன் பிரிவு 21 இன் படி மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அஸ்மான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here