ஈப்போ, அக்டோபர் 26 :
அங்கு பெய்துவரும் கனமழை காரணமாக குவா தெம்புருங் குகையின் வெளியேறும் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கிருந்து வெளியேற முடியாது சுமார் 30 பேர் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று கம்பார் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் முகமட் நஸ்ரி தாவூட் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை (அக். 26) மாலை 3 மணியளவில், அப்பகுதியில் நீர்மட்டம் உயரத் தொடங்கியதாகவும், உள்ளே சிக்கியவர்கள் அந்த இடத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த படக்குழுவினர் என்றும் அவர் கூறினார்.
“சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்கு உதவ போலீஸ் குழுவும் அந்த இடத்திற்கு குவிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.