பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 29 :
15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பல நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கைவிடும், அதாவது மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்காத PKRன் நடவடிக்கை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று PKR கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் தியான் சுவா எச்சரித்துள்ளார்.
PKRன் சமீபத்திய வேட்பாளர் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், சில இடங்களுக்கு கட்சித் தலைமை எடுத்த முடிவு காரணமாக பலர் ஏமாற்றம் அடைந்திருப்பதாக முன்னாள் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
“வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சரியான அமைப்பு ஒருபோதும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வேளையில் கட்சி மிகவும் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக தேர்தல் காலங்களில் வாக்காளர்களின் உணர்வுகளை கட்சி புறக்கணிக்க முடியாது”.
PKR வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்காக குரல் கொடுக்கவும், அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர்கள் தொடர்ந்து அதே தொகுதியில் போட்டியிட அனுமதிக்காது அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதால், அது கட்சியின் அடிமட்ட மக்களை காயப்படுத்துவது மட்டுமல்லாமல், எங்களுக்கு உண்மையாக ஆதரவளிக்கும் வாக்காளர்களையும் விரக்தியடையச் செய்கிறது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.