அம்பாங் ஜெயா,அக்டோபர் 31 :
இங்குள்ள அம்பாங் மேவாவில் உள்ள ஒரு உணவகத்தில், இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சந்தேக நபர் தலைக்கவசத்தால் அடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.
கடந்த ஒக்டோபர் 24ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில், பாதிக்கப்பட்ட 39 வயதுடைய நபரும் அவரது 42 வயது மனைவியும் உணவகத்திற்கு வந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது,
பாதிக்கப்பட்டவர் தவறான வார்த்தைகளை பேசினார், இதனால் கோபமடைந்த சந்தேக நபர் அவரை தலைக்கவசத்தால் அடித்தார்.
தலை மற்றும் கைகளில் காயமடைந்த பாதிக்கப்பட்டவர் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், பின்னர் அவரது மனைவி அம்பாங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபரூக் இஷாக் கூறுகையில், புகாரின் பேரில், அம்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தினர் 22 வயதுடைய சந்தேக நபரை நேற்று கைது செய்தனர் என்றார்.
“தவறான புரிதல் மற்றும் தவறான வார்த்தைகளைப் பேசியதால் ஏற்பட்ட அதிருப்தியே இந்தச் சம்பவத்துக்குக் காரணம்” என்று அவர் கூறினார்.
இவ்வழக்கு தண்டனைச் சட்டத்தின் 324வது பிரிவின்படி விசாரிக்கப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது சவுக்கடி அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றார்.