சிரம்பான், நவம்பர் 12 :
நேற்றிரவு இங்குள்ள ஒரு உணவகத்தில், ஒரு கட்சி வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில், செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களை மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றிரவு 11.50 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இருவரையும் தாமான் சிரம்பான் செலாத்தானில் வைத்து கைது செய்ததாக, நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டிசிபி அஹ்மட் ஜாஃபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.
“குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் இரு நபர்களும் செய்தியாளர்களை கவரேஜ் செய்வதிலிருந்து எச்சரித்தனர். மேலும், அந்த நபர்கள் கண்ணாடி, மதுபாட்டில்கள் மற்றும் காலணி ஆகியவற்றை பத்திரிகையாளர்கள் மீது வீசினர் எனக் கூறப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் “அச்சுறுத்தல்கள் செய்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 506 இன் கீழ் விசாரிக்கப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வேண்டுமென்றே பொது அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.