எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், பெரிகாத்தான் நேஷனல் (PN) மற்றும் பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர்கள் பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ 15) முன்னதாக தங்கள் சொத்துக்களை அறிவிக்காததற்காக கண்டனம் தெரிவித்துள்ளார்.
PN மற்றும் BN வேட்பாளர்கள் வெளிப்படைத்தன்மைக்கு தயாராக இல்லை. அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருந்தபோது அவர்கள் குவித்த சொத்துக்களை மக்களுக்கு வெளியிடத் துணியாமல் பயப்படுகிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது என்று முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிகேஆரின் 72 வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் சொத்து விவரங்களை அறிவித்துள்ளனர், முதலில் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லியும் அவரைத் தொடர்ந்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் தங்கள் சொத்து விவரங்களை அறிவித்தனர். இதனை முன்மாதிரியாகக் கொண்டு பிகேஆர் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மூடாவின் தலைவர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் தனது சொத்து மதிப்பு RM1.9 மில்லியன் என அறிவித்தார்.
இதற்கிடையில், டிஏபியின் பொதுச்செயலாளர் லோக் சியூ ஃபூக், நவம்பர் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக அதன் வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் தங்கள் கட்சிக்கு இல்லை என்று கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறிய அவர், டிஏபி முந்தைய தேர்தல்களிலும் இந்த முறையைக் கடைப்பிடித்தது என்றும் கூறினார்.
ஆனால் PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங், PKR இன் GE15 வேட்பாளர்களுக்கான கட்டாய சொத்து அறிவிப்பு எனபது “முட்டாள்தனம்” என்று சாடினார். பாஸ் கட்சியின் துணைத் தலைவர் அமர் நிக் அப்துல்லா நாட்டில் உள்ள செல்வந்தர்களை காட்டிலும் வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்தார்.