‘அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை மீண்டும் டுவிட்டரில் அனுமதிக்கலாமா’ என்ற கேள்வியை எழுப்பி வாக்கெடுப்பை நடத்தியுள்ளார் எலான் மாஸ்க்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப்பை வீழ்த்தி அமெரிக்க அதிபரானார். அப்போது ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப்பின் ஆதரவாளர்கள் பல பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதையடுத்து மோதலை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் அவதூறாகக் கருத்துகள் பதிவிட்டு வந்ததாகக் கூறி டுவிட்டர் நிறுவனம் சுமார் ஒன்பது கோடிப் பேரால் பின்தொடரப்பட்டு வந்த டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது.
இதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் மற்றும் கூகுளின் யூடியூபிலிருந்தும் ட்ரம்ப்பின் கணக்குகள் முடக்கப்பட்டன. இதையடுத்து டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்குப் போட்டியாக டொனால்டு டிரம்ப் புதிதாக ‘TRUTH’ என்னும் புதிய சமூகவலைதள செயலியை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்புடத்தக்கது.