மலேசியா ஒரு முக்கியமான பங்காளி நாடாக இருப்பதால், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றவும், உறவுகளை வலுப்படுத்தவும் விரும்புவதாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.
10ஆவது பிரதமராக அன்வார் நியமிக்கப்பட்டது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் டுவீட்டுக்கு வெள்ளிக்கிழமை (நவம்பர் 25) பதிலளித்த அவர் தனது டுவீட்டில் இவ்வாறு கூறினார்.
நன்றி PM@narendramodi, மலேசியாவிற்கு இந்தியா ஒரு முக்கிய பங்குதாரர். வர்த்தகம், முதலீடு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்று அன்வார் கூறினார்.
மோடி தனது டுவீட்டில், அன்வாரின் நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் இந்தியா-மலேசியா மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்தார். மலேசியாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் டத்தோஸ்ரீ @anwaribrahim. இந்தியா-மலேசியா மேம்படுத்தப்பட்ட மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நான் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று மோடி கூறினார்.
75 வயதான அன்வர், வியாழன் (நவம்பர் 24) இஸ்தானா நெகாராவில் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முன்னிலையில் 10ஆவது பிரதமராக பதவியேற்றார்.