“நான் அன்வாரை இஸ்ரேலின் முகவர் என்று சொல்லவில்லை” என்கிறார் ஹாடி அவாங்

ரொம்பின், நவம்பர் 30 :

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இஸ்ரேலின் முகவர் என்று கூறியது தொடர்பில் பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

“யார் அதை சொன்னது? நான் அதைச் சொல்லவில்லை, ”என்று நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 29) இரவு ரொம்பினில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அப்துல் ஹாடி கூறினார்.

“நான் சொன்னேனா இல்லையா என்பது புக்கிட் அமானுக்குத் தெரியும். புக்கிட் அமான் (எனது வாக்குமூலத்தை) பதிவு செய்கிறது, அவர்கள் எனது அறிக்கைகளைப் படித்தார்கள் என்று நினைக்கிறேன்” என்று அப்துல் ஹாடி மேலும் கூறினார்.

புக்கிட் அமானுக்கு தான் பலமுறை அழைக்கப்பட்டதாகவும், மீண்டும் மீண்டும் விசாரிக்கப்படுவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

மேலும் அப்துல் ஹாடி போலீசாரின் விசாரணைக்குத் தயாராக இருப்பதாகவும், ஆனால் இன்னும் அழைக்கப்படவில்லை என்றும் கூறினார்.

முன்னதாக, நேற்று செவ்வாயன்று (நவம்பர் 29), பிரதமருக்கு எதிரான கருத்துகளுக்காக அப்துல் ஹாடி விசாரிக்கப்படுகிறார் என்று புக்கிட் அமான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here