கூலிம், டிசம்பர் 1 :
பாடாங் செராயில் இணைப்புச் சிக்கல்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில், ஆய்வுகளை மேற்கொண்டு விரைவில் ஒரு தொடர்பு கோபுரம் அமைக்கப்படும் என்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, இந்த கோபுரமானது தேசிய அகண்ட அலைவரிசை திடடத்தின் (JENDELA) கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் மூலம் பாடாங் செராயில் உள்ள ஐந்து கிராமங்களில் இணைய இணைப்பு சிக்கல்களை சமாளிக்க முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, புதிய கோபுரம் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இடைக்கால தீர்வுக்காக, தற்போதுள்ள (அருகிலுள்ள) தகவல் தொடர்பு கோபுரத்தை மேம்படுத்த ஒரு வாரத்திற்குள் மேம்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சேவை வழங்குனரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நவம்பர் 28 அன்று, ஐந்து கிராமங்களில் வசிக்கும் சுமார் 8,000 பேர் நெட்வொர்க் இணைப்பு பிரச்சனைகளை எதிர்கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.