கோலாலம்பூர், டிசம்பர் 7 :
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியாவிற்கான மின்னியல் விசா (E -Visa) நேற்று (டிச.6) முதல் மீண்டும் அமலுக்கு வந்தது.
முன்னர் மின்னியல் விசா சேவைக்கு அறவிடப்பட்ட RM150 கட்டணம் தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படுவதாகவும், இது நேரடியாக சென்று விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான செலவின் இரெண்டு மடங்கு விலை குறைப்பாகும் என்று கேபிஎஸ் சுற்றுலா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கே.பி சாமி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை இந்திய- மலேசிய நட்புறவினை விரிவுபடுத்திக்கொள்ளும் விதமாக அமைந்துள்ளதாகவும், இந்த விலை குறைப்பினால் மலேசியாவிலிருந்து செல்லும் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் மிகவும் பயனடைவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
RM150 செலுத்தி மின்னியல் விசா பெறுவோர் அதனை ஒரு மாதத்திற்குள் பயன்படுத்த முடியும். அத்தோடு ஒரு ஆண்டுக்கான மின்னியல் விசாவிற்கு RM250 கட்டணமும், ஐந்து ஆண்டுகளுக்கான மின்னியல் விசாவிற்கு RM450 கட்டணமும் செலுத்தி மலேசியர்கள் இந்திய மின்னியல் விசாவை பெற்றுக்கொள்ளலாம்.
இனி இந்திய விசா பெறுவதற்கு மலேசியர்கள் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டியதில்லை என்றும், இணையத்தின் வாயிலாக மின்னியல் விசாவிற்கு விண்ணப்பம் செய்து, அதற்கான கட்டணத்தை செலுத்தி இலகுவாகப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் கே.பி சாமி கூறினார்.