பொதுப்பணித்துறை தலைமை இயக்குநர் பதவியில் இருந்து தனது சேவை திடீரென இடைநிறுத்தப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக டத்தோஸ்ரீ முகமட் ஷாபிக் அப்துல்லா இன்று தெரிவித்தார்.
30 ஆண்டுகளாக தனது நேரத்தையும் ஆற்றலையும் பொதுச் சேவையில் ஈடுபடுத்திய போதிலும், தனது சேவையை திடீரென இடைநிறுத்திய அரசாங்கத்தின் முடிவால் அதிருப்தி அடைந்தது மட்டுமல்ல, இச்செயல் தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் முகமட் ஷாபிக் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு டிசம்பர் 1, 2022 தேதியிட்ட பணிநீக்கக் கடிதம் எனக்கு எனக்கு நேற்றுதான் (டிசம்பர் 12) கிடைத்தது, எனது பணி நீக்கம் டிசம்பர் 12 அன்று நடைமுறைக்கு வந்த அதே தேதியில் அது பெறப்பட்டதால் எனக்கு நியாயமான அறிவிப்பு வழங்கப்படவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக வெளியான ஒரு அறிக்கையில், டிசம்பர் 12 ஆம் தேதி முதல் பொதுப்பணித்துறை தலைமை இயக்குநராக முகமட் ஷாபிக்கின் சேவையை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஜூகி அலி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.