சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த 13 இராணுவ வீரர்கள் கொண்ட குழு பயணம் செய்த மலேசிய ஆயுதப்படைக்குசொந்தமான டிரக், கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடி பாதையின் கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி, விபத்துக்குள்ளானதில் 4 இராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு 7 மணியளவில், சிரம்பானுக்கு செல்லும் திசையில், போர்ட்டிக்சன்-சிரம்பான் நெடுஞ்சாலையில் மாம்பாவ் டோல் பிளாசா அருகே குறித்த டிரக் விபத்தில் சிக்கியது என்று சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நந்தா மரோஃப் கூறினார்.
“முதற்கட்ட விசாரணையில், 25 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் ஓட்டிச் சென்ற மூன்று டன் எடையுள்ள டிரக், சுங்கச்சாவடியின் சாலைத் தடுப்பு கான்கிரீட்டில் மோதி விபத்து ஏற்பட்டது” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
“இதில் டிரக் ஓட்டுநர் உட்பட நான்கு இராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்ததாகவும், ஏனைய எட்டு இராணுவ வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன, மேலும் இருவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.
“19 மற்றும் 25 வயதுக்குட்பட்ட காயமடைந்த 12 இராணுவ வீரர்களும் மேலதிக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சிரம்பானின் துவாங்கு ஜாபர் (HTJS) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 43(1) இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும், மேலதிக விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.