பொதுச்சேவை ஊழியர் ஒருவரிடம் அரை மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக இழப்பு ஏற்படுத்தும் வகையில் மோசடி செய்ததாக, குறி சொல்பவர் ஒருவர் மீது இன்று மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட இந்தியப் பிரஜையான என். பிரகாஷ், 24, என்பவர் மீதான குற்றச்சாட்டுகள், மாவட்ட நீதிமன்ற நிதிபதி முகமட் ஹரித் முகமட் மஸ்லான் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தான் குற்றமற்றவர் என மறுத்து, விசாரணை கோரினார்.
குற்றச்சாட்டுகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் M. புனிதா, 59, என்பவரின் நோய்களைக் குணப்படுத்துவதாகவும், அதிர்ஷ்டம் பார்க்கவும் முடியும் என்றும் கூறி அப்பெண்ணை ஏமாற்றி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு RM516,450 தொகை இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த மார்ச் 23 முதல் அக்டோபர் 18 வரை, எண். 20 லோரோங் பெர்டா செலாத்தான் 2, பண்டார் பெர்டா என்ற இடத்தில் இக்குற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு இரண்டு உள்ளூர் நபர் பிணையுடன், RM8,000 ரொக்கப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது, அதே நேரத்தில் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் ஒவ்வொரு திங்கட்கிழமையும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, வழக்கு முடியும் வரை விசாரணை அதிகாரியிடம் சென்று தனது இருப்பை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டார்.
வழக்கு ஜனவரி 31-ம் தேதிக்கு மீண்டும் செவிமடுக்கப்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.