தாமான் சாலாக் மாஜூவில் 13 வயது சிறுமி காணாமல் போனது தொடர்பில் வாட்ஸ்அப் செயலியில் பெரிதும் பகிரப்பட்ட சம்பவத்தை, போலீசார் உறுதிப்படுத்தினர்.
சல்சபிலா புத்ரி மாட் நசீர், 13, என்ற சிறுமி காணாமல் போனதாக, அவரது சகோதரர் முகமட் ஃபித்ரா நேற்று காலை 10 மணியளவில் பண்டார் பாரு சாலாக் திங்கி காவல் நிலையத்தில் புகாரளித்ததாக, செப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.
“அவரது சகோதரர் அளித்த புகாரின்படி, நேற்று (டிச. 25) அதிகாலை 2.30 மணியளவில் சல்சபிலா புத்ரி காணாமல் போனதை குடும்பத்தினர் கவனித்ததாக” அறியமுடிகிறது.
ஹோம்ஸ்டே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளின் அடிப்படையில், சிறுமி கருப்பு உடை அணிந்து, வீட்டை விட்டு வெளியேறியதும், ஒரு நபரை சந்தித்ததும், பின்னர் அவர் சிறுமியை குடியிருப்பில் இருந்து வெளியே அழைத்துச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டதாக வான் கமாருல் அஸ்ரான் கூறினார்.
“குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“குறித்த சிறுமியின் குடும்பம் பினாங்கில் இருந்து விடுமுறைக்காக இங்கு வந்துள்ளதாகவும், காணாமல் போனதாக கூறப்படும் சிறுமி 165-செ.மீ உயரம் மற்றும் சுமார் 50 கிலோ எடை கொண்டவர் “ என்றும் அவரது சகோதரர் கூறியதாக ACP வான் கமாருல் கூறினார்.
மேலும் “அவர் ஹோம்ஸ்டேயை விட்டு வெளியேறும்போது, கருப்பு உடை, சாம்பல் நிற முகக்கவசம் மற்றும் சாம்பல் நிற காலணிகளை” அணிந்திருந்தார்.
தகவல் தெரிந்தவர்கள் 017-480 7301 அல்லது 011-1123 2617 என்ற எண்ணில் தன்னைத் தொடர்புகொள்ளலாம் என்று காணாமல் போன சிறுமியின் சகோதரர் முகமட் ஃபித்ரா கூறினார்.