ஶ்ரீ கெம்பாங்கனில் உள்ள தாமான் இக்யுனி சமூக நல இல்லத்தின் முன் உள்ள குப்பைக் கிடங்கில் புதிதாக பிறந்த பெண் குழந்தையின் உடல் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. ஏ.ஏ.அன்பழகன் கூறுகையில், ஆரஞ்சு நிறப் பையில் வைக்கப்பட்டு, வெளிர் நிறமுள்ள குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடம் இருந்து காலை 10.05 மணிக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
குப்பை சேகரிப்பவர் குழந்தையின் சடலத்தை குப்பை கிடங்கில் கண்டதாக அவர் கூறினார். இறப்புக்கான காரணத்தை அடையாளம் காண குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிறப்பை மறைத்ததற்காகவும், மரணத்தை ஏற்படுத்தியதற்காகவும் குற்றவியல் சட்டம் பிரிவு 318இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.