ஜோகூரில் உள்ள பத்து பகாட்டைத் தவிர ஏனைய ஐந்து மாவட்டங்களில் வெள்ள நிலைமை மேம்பட்டுவருகிறது.
இன்று வியாழக்கிழமை (மார்ச் 9) இரவு 8 மணி நிலவரப்படி, ஜோகூர் முழுவதும் செயற்பாட்டிலுள்ள மொத்தம் 174 தற்காலிக நிவாரண மையங்களில் மொத்தம் 43,856 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக, மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெள்ளம் மிக மோசமாக பாதித்த மாவட்டமான பத்து பகாட்டில் 10,443 குடும்பங்களைச் சேர்ந்த 36,508 நபர்கள் தற்போது அங்குள்ள 110 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
“இருப்பினும், வெள்ளம் பாதித்த மற்றய ஐந்து மாவட்டங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார் எண்ணிக்கை இன்று நண்பகலுடன் ஒப்பிடும் போது, தற்போது குறைவடைந்துள்ளது. முறையே மூவாரில் 3,791 பேரும் அதைத் தொடர்ந்து தாங்காக்கில் 2,175 பேரும், சிகாமாட்டில் 1,050 பேரும், மெர்சிங்கில் 219 பேரும் மற்றும் குளுவாங்கில் 113 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.